வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கவனிப்பாரற்று நிற்கும் காயமடைந்த யானை!!

517

காயமடைந்த யானை

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காயமடைந்த நிலையில் காணப்படும் யானை தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா பாலமோட்டை குளத்தினுள் யானையொன்று வலது முன்னங்காலில் காயமடைந்த நிலையில் காணப்படுவதாக கிராம மக்களால் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் யானை குளப்பகுதியில் தொடர்ந்தும் காயத்துடன் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு மீண்டும் அறிவித்தல் வழங்கியதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் யானையை பார்வையிட்டு சென்றுள்ளனர்.

எனினும் அதற்கு சிகிச்சை அளிக்கப்படாமையினால் தொடர்ந்தும் யானை குளப்பகுதியில் காணப்பட்டு வருகின்றது. நடமாடுவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ள இவ் யானை காட்டுப்பகுதிக்குள் செல்ல முடியாத வகையில் காணப்படுகின்றமை தொடர்பில் கிராம வாசிகள் கவலை வெளியிட்டனர்.

இந் நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உததியோகத்தர் ஒருவருடன் ஊடகவியலாளர் இது தொடர்பில் கேட்டபோது, காயமடைந்த யானையினை சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அவர் வருகை தராமையினால் சிகிச்சை அளிக்கமுடியாதுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.