பெரிய சிக்கல் ஒன்றிலிருந்து தப்பித்துக் கொண்ட இலங்கை அணி!!

450


இலங்கை அணி



சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), கடந்த சனிக்கிழமை (15) அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்காமல் போனமைக்கு இலங்கை அணி மீது தண்டனைகள் எதனையும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.



உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த ஊடக சந்திப்பில் இலங்கை அணியின் வீரர்களோ அல்லது பயிற்சியாளர்களோ அல்லது இலங்கை அணியின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளோ எவரேனும் பங்கேற்றிருக்கவில்லை.




“இலங்கை கிரிக்கெட் சபை (SLC), ‘சனிக்கிழமை சம்பவம்’ தொடர்பில் ஐ.சி.சி. உடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பதுடன், இதேமாதிரியான சம்பவம் இந்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் இடம்பெறாது என்பதனை உறுதி செய்துள்ளது.” என இலங்கை கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (17) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தது.


மேலும், இலங்கை கிரிக்கெட் சபை தமது அறிக்கையில் இலங்கை அணியின் முகாமைத்துவத்துவத்திற்கும் இந்த சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்திருந்தது.

“இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அணியின் முகாமைத்துவ குழுவுக்கு விதிமுறைகளுக்கு அமைவாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஐ.சி.சி. இன் உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணி, விதிமுறைகளுக்கு அமைவாக நடக்க வேண்டும்.”


தமது ஆறாவது உலகக் கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (21) விளையாடவுள்ள இலங்கை அணி தற்போது லீட்ஸ் நகரில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.