மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!!

280

தற்கொலை செய்துகொண்ட நபர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் 2 மகன்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அயோவா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் சுங்காரா (44). இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்.

இவர் தனது மனைவி லாவண்யா சுங்காரா (41), 15 மற்றும் 10 வயதுள்ள 2 மகன்களுடன் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த பொலிசார் 4 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த 4 பேரின் உடல்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சந்திர சேகர் சுங்காரா தனது மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திர சேகர் சுங்காரா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், தடயவியல் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சந்திர சேகர் சுங்காரா தனது குடும்பத்தினரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமத்தை சந்திர சேகர் சுங்காரா பெற்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் துப்பாக்கி வாங்கியதற்கான ஆதாரங்களையும் தற்போது விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் எந்தவகையான துப்பாக்கி வாங்கியுள்ளார் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவத்தின்போது சந்திர சேகர் சுங்காராவின் குடியிருப்பில் வேறு ஒரு குடும்பமும் விருந்தினர்களாக தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரே உதவி கேட்டு பொலிசாருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.