பன்னாட்டு ஓவியப்போட்டியில் முதலாவது பரிசினை வென்ற ஈழத்துச் சிறுமி!!

756

ஈழத்துச் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.

குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்றுள்ளது. இசை என்னை அசைக்கிறது எனும் தலைப்பில் குறித்த சிறுமி வரைந்த ஓவியம் பல ஆயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெல்லப்பட்டுள்ளது.

இசையுடன் தொடர்புபடுத்தி, உங்கள் சொந்த அனுபவத்தினை கலையாகப் படையுங்கள், இசை எப்படி உங்களை ஆட்படுத்துகிறது, இசை ஆக்கத்திறனை எப்படி வளர்க்கிறது, அதனை நீங்கள் உங்கள் கலையால் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பன போட்டியில் கேட்கப்பட்டிருந்த தலைப்புகளுக்கு சிறுமி ஆக்கத்தினை வரைந்துள்ளார்.

இசை கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது, செய்திகளை கடத்துகிறது, தூது செல்கிறது, பார்வை மாற்றத்தை அளிக்கிறது, சிந்திக்க வைக்கிறது எனும் பொருளில் பிறர் உதவி இல்லாமல் இவ் ஓவியம் தன்னால் நிறந்தீட்டி படைக்கப்பட்டதாக செல்வி அபிர்சனா தெரிவித்துள்ளார்.

பல்துறைகளில் தமிழர்கள் மென்மேலும் வளரவேண்டும், உலகில் பல சாதனைகள் படைக்கவேண்டும் எனப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.