லண்டனில் சாதிக்கவேண்டும் : இதுவே என் கனவு என்று கூறும் தமிழ் பெண் : யார் தெரியுமா?

256

ஸ்ரீசாய் சுதர்சனா

டிரம்ஸ் இசையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழ் பெண்ணான ஸ்ரீசாய் சுதர்சனா, லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பயிற்சியாளராவதே தனது கனவு என்று கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாய் சுதர்சனா.

சிறு வயது முதலேயே டிரம்ஸ் இசை மீது ஆசை கொண்ட இவருக்கு, எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும், முதலில் இவர் தேடுவது டிரம்ஸ் இசை தான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, தனது ஆசையைப் பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் முதலில் மறுக்க, பிறகு மகளை டிரம்ஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர்.

பயிற்சியில் சேர்வதற்கு சென்றபோது, நாற்காலியில் அமர்ந்து வாசிக்கும் அளவிற்கு கூட, சுதர்சனா உயரமில்லை. இதனால், மூன்று ஆண்டுகள் காத்திருந்து, ஐந்தாவது படிக்கும்போது மீண்டும் டிரம்ஸ் வகுப்பில் சேர்ந்தார். டிரம்ஸ் இசையில் உள்ள 8 கிரேடுகளில், 6 கிரேடுகளை முடித்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார் சுதர்சனா.

சில தினங்களுக்கு முன் புதுச்சேரி காந்தி திடலில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 50 டிரம்மர்கள் இசைத்த நிகழ்வில் இசைத்த ஒரே பெண் டிரம்மர் ஸ்ரீசாய் சுதர்சனா மட்டுமே. 15 கிலோ எடை கொண்ட டிரம்மை, உடலில் சுமந்து இசைப்பதும் இவரது சிறப்பு.

லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, அந்தக் கல்லூரியிலேயே இசை பயிற்சியாளராக வேண்டும் என்றும், டிரம்ஸ் இசையில் உலக சாதனை நிகழ்த்துவதே தனது கனவு என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்ரீசாய் சுதர்சனா.