இலங்கை செல்ல விரும்பவில்லை : அகதிகளின் சொன்ன உருக்கமான காரணம்!!

531


தமிழகத்தில் இலங்கை தமிழர்கள்



தமிழகத்தில் இலங்கை தமிழர்கள், இந்திய குடியுரிமை தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், கடந்த 1990-ஆம் ஆண்டு, இராமேஸ்வரத்திற்கு சென்றனர்.



அதன் பின், அவர்கள் தீவிர விசாரணைக்குப் பின் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.




இந்நிலையில், இவர்கள் தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. இதனால் இந்தியக் குடியுரிமை வழங்கி எங்களுக்கும் இந்தியர்களைப்போல அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்துள்ளனர்.


மேலும் இது குறித்து அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தன் என்பவர் கூறுகையில், இலங்கையில் இருந்து 1990-ம் ஆண்டு இராமேஸ்வரம் வந்தோம். அப்போது எனக்கு 7 வயது. அதன் பின் அங்கே இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தோம். தற்போது 35 வயது ஆகிறது.

இங்கே மட்டும் 80 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ரேஷன் கடையில் எங்களுக்கு தனி அட்டை வழங்கப்படுகிறது. அங்கே அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கும்.

ஆனால், எங்கள் முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் அட்டையைப் பயன்படுத்த முடியாது. ஓட்டுரிமை இல்லை. இருசக்கர வாகனம் வாங்கவோ, சொத்து வாங்கவோ முடியவில்லை.

நாங்கள் இங்கே இருந்து கூலிவேலை செய்து தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது நாங்கள் இலங்கைக்கு சென்றால், புது வாழ்க்கையை தான் துவங்க வேண்டும். எங்களுக்கு மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதே போன்று வீரரத்தினம் என்பவரும் கால் நூற்றாண்டுக்கு பின் மீண்டும் இலங்கைக்கு சென்று எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது, ஓரிரு ஆண்டுகள் ஆனாலே இருக்கும் இடங்கள் மாறிவிடுகின்றன.

அப்படி நாங்கள் சென்றால், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் ஏற்படும். எனவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் கிடைத்தால் போதும். நாங்கள் இங்கேயே நிம்மதியாக வாழ்ந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.