விடைபெற்றார் லசித் மலிங்க!!

443


லசித் மலிங்க



2019 உலகக் கோப்பை தொடருடன் இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்காவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியே உலகக் கோப்பை தொடரில், மலிங்காவின் கடைசி போட்டியாகும். இப்போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.



இப்போட்டியில், 10 ஓவர்கள் வீசிய மலிங்கா 82 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 55 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார் மலிங்க.




இப்பட்டியலில் 71 விக்கெட்களுடன் அவுஸ்திரேலியா வீரர் க்ளென் மெக்ராத் முதலிடத்திலும், 68 விக்கெட்டுகளுடன் இலங்கை வீரர் முரளிதரன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 56 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, 3 வது அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக தனது உலகக் கோப்பை வாழ்க்கையை முடித்தார்.