இளவரசியை புகைப்படம் எடுத்த பணியாளர் : காலை முத்தமிடவைத்த இளவரசி : விசாரணை ஆரம்பம்!!

306

காலை முத்தமிடவைத்த இளவரசி

சவுதி இளவரசி ஒருவர், பாரீஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறி, தனது பாதுகாவலரை வைத்து அந்த பணியாளரை அடித்து உதைத்து, தனது காலில் முத்தமிட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சவுதி இளவரசி Hassa bint Salman (43), மீது ஆயுதம் கொண்டு தாக்கியதற்கு துணைபோனது, எகிப்தில் பிறந்த ஒருவரை கடத்துவதற்கு துணை போனது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் பிரான்சில் விசாரணை துவங்க உள்ளது. இளவரசி ஆஜராக மாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அவர் இல்லாமலே இன்று விசாரணை நடைபெற உள்ளது.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி இளவரசியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதோடு, அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. Ashraf Eid என்னும் அந்த பணியாள் கூறும்போது, தன்னை இளவரசியின் பாதுகாவலர் அடித்து உதைக்கும்போது, இளவரசி தன்னை நாய் போல் நடத்தியதாகவும், நீ எப்படி ஒரு இளவரசியிடம் பேசுவாய் என்று பார்க்கிறேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salmanஇன் சகோதரியான Hassa தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவரது வழக்கறிஞரான Emmanuel Moyneம், இது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், இளவரசி அப்படி எதுவும் சொல்லவேயில்லை என்றும் மறுத்துள்ளார்.

இளவரசி மிகவும் அக்கறை காட்டுபவர், தாழ்மையானவர் மட்டுமின்றி நாகரீகமானவர் என்று கூறியுள்ள Emmanuel Moyne, சவுதி சட்டப்படி, இளவரசியை பாதுகாக்கும் நோக்கில் அவரை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கு தொடர்பாக சவுதி அரசை தொடர்பு கொண்டபோது, சவுதி அரசு தகவல் தொடர்பு அலுவலகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.