இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் : காரணம் என்ன?

534

முகநூல் பக்கங்கள்

இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது எமக்கு குரல் எழுப்ப வழியில்லை. எனது முகநூல் பக்கத்தில் 11 லட்சம் பேர் நண்பர்களாக இருந்தனர். நாங்கள் முகநூல் பல நல்ல பணிகளுக்கு பயன்படுத்தினோம். எமக்கு பலர் இணைந்தனர். இவற்றை அடக்கவா எனது முகநூல் பக்கம் நீக்கப்பட்டது.

இந்த விடயத்தின் பின்னர் சிலர் இருக்கின்றனர் என்று நான் சந்தேகப்படுகிறேன். எனது முகநூல் பக்கம் கடந்த வெள்ளிக் கிழமை நீக்கப்பட்டது. இது நாளை உங்களுக்கு நடக்கலாம். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடக்கலாம்.

நான் இனவாதத்துடன் சம்பந்தப்படவில்லை. எனினும் எமக்குரியவை பற்றி பேசினேன். கூரகல பற்றி பேசினேன். கலகொட அத்தே ஞானசார தேரரின் ஒரு புகைப்படத்தை கூட முகநூலில் பதிவேற்ற முடியாது. இந்த பிரச்சினை யார் உலகத்திற்கு கொண்டு செல்வது. இந்த பின்னணியில் இருப்பது யார். முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் இருக்கின்றனர்.

இவர்களின் முகநூல் பக்கத்தை பார்த்தால், அவற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதிவுகள் இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்த்துள்ளனர். முகநூலை கட்டுப்படுத்துவது யார்.

அப்துல் ராசிக்கின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முடியும். அது தடை செய்யப்படவில்லை. இது திட்டமிட்டு செய்யும் வேலை. இவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். முகநூலை புதிய வாக்காளர்களே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இராஜ் வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சிங்கள பாடகரான இராஜ், அம்பா சமுத்திரம் அம்பானி என்ற தமிழ் திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அத்துடன் அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.