வவுனியாவில் பெண் பிள்ளைகளின் முழு விபரமும் வீதியில் : பெற்றோர் விசனம்!!

436

பெற்றோர் விசனம்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்பப் படிவங்களை வீதியில் வீசியமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பபடிவங்களை பயன்படுத்தியுள்ளது. இதில் மாணவிகள் மற்றும் மாணவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்கள் பெற்றோரது தொலைபேசி இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த விபரங்கள் அடங்கிய விண்ணப்படிவங்கள் நெளுக்குளம் பகுதியிலுள்ள ஒழுங்கையின் குளப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை இவ் வீதியில் பயணித்தவர்கள் பெண்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விண்ணப்பபடிவங்கள் அதிகளவில் காணப்படுவதை அவதானித்து இது தொடர்பில் ஆராய்ந்தபோதே தனியார் கல்வி நிலையத்தினரின் அசமந்தப்போக்கு தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் விசனமடைந்துள்ள நிலையில் குறித்த தனியார் கல்வி நிலையத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

தமது கல்வி நிலையம் இடம் மாற்றப்பட்டபோது பழைய விண்ணப்பபடிவங்களை அழிப்பதற்காக வைத்திருந்தபோது அவை களவாடப்பட்டு வீதியோரங்களில் வீசப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சிலவற்றை தான் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இப் படிவங்கள் களவாடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு எதனையும் தான் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.