துபாய் அரசரிடம் பிள்ளைகளை ஒப்படைக்கக்கூடாது : இலங்கைக்கு தப்ப முயன்று பிடிபட்ட இளவரசியின் நண்பர்!!

365

துபாய் அரசர்

பிரித்தானிய வரலாற்றில் அதிக செலவு பிடிக்கும் விவாகரத்துகளில் ஒன்று என கருதப்படும் துபாய் அரசர், அவரது ஆறாவது மனைவியின் விவாகரத்து லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும் நிலையில், பிள்ளைகளை அரசரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று இலங்கைக்கு தப்ப முயன்று பிடிபட்ட இளவரசி லத்தீபாவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

துபாய் அரசர் Sheikh Mohammedஇன் ஆறாவது மனைவி Haya bint al-Husseinதுபாயிலிருந்து தப்பியோடி லண்டனில் மறைந்திருக்கும் நிலையில், அவர்களது விவாகரத்து வழக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற உள்ளது. விவாகரத்து வழங்கப்படும்போது, பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை எழும்.

அப்படி வரும்போது எக்காரணம் கொண்டும் பிள்ளைகளை அரசரிடம் ஒப்படைக்ககூடாது என இளவரசி லத்தீபாவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஏனென்றால், ஏற்கனவே துபாயிலுள்ள தங்கள் வீட்டிலிருந்து அரசரின் மகளான இளவரசி லத்தீபா (33) தப்பியோட முயலும்போது, அவரும் அவரது மற்றொரு சகோதரியும் கடத்தப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லத்தீபா இலங்கைக்கு தப்ப முயலும்போது, இந்திய கடற்பகுதியில் சிக்கினார். லத்தீபா தப்புவதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த முன்னாள் பிரெஞ்சு உளவாளியான Captain Herve Jaubert, லத்தீபா ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதால், அவரால் தந்தையின் விவாகரத்து வழக்கில் பங்கேற்க இயலாது என்றும், அதனால் அவரது சார்பில் பேச தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படி மகளையே கடத்தக்கூடிய ஒரு நபரிடம் பிள்ளைகளை ஒப்படைப்பதால் அவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதை வழக்குடன் தொடர்புடையோர் நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில், விவாகரத்து வழக்கிற்காக அரசர் Sheikh, Helen Ward என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளார். Helen Ward, பாடகி மடோனாவிற்கு அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொடுத்தவர்.

அரசரின் மனைவியான இளவரசி ஹயா தனது சார்பில் வழக்காட Steel Magnolia என்ற பட்டப்பெயர் கொண்ட Fiona Shackletonஐ நியமித்துள்ளார். Fiona Shackleton ஒன்றும் சாதாரண ஆளில்லை, இளவரசர் சார்லசுக்கு இளவரசி டயானாவிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொடுத்தவர் அவர்தான்.