வவுனியாவில் மரங்களை கடத்தி வந்த வாகனம் விபத்து : கடத்தல்காரர் வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

404


வாகனம் விபத்து



வவுனியா, சாந்தசோலை சந்திக்கருகாமையில் முதிரை குற்றிகளை ஏற்றிசென்ற கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மரங்களை கடத்தியவர்கள் தப்பியோடியுள்ளனர்.



இன்று (15.08.2019) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி 10 முதிரை மரக்குற்றிகளை கடத்திச் சென்ற கப் ரக வாகனம் சாந்தசோலை சந்தியில் வாகன அச்சு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.




இதனையடுத்து முதிரை மரங்களை அவ்விடத்திலேயே இறக்கிவிட்டு வாகனத்தை கட்டி இழுத்து செல்ல முற்பட்ட நிலையில் அதுவும் உடனடியாக சரிவராமையால் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மரங்களையும், வாகனத்தையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


யாருமற்ற நிலையில் வாகனம் நின்றமையால் சந்தேகமைடந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், வன இலாகாவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த அவர்கள் மரங்களையும், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.