வவுனியா நகரசபைத் தவிசாளர் மீது தாக்குதல் : விசாரணை நடத்துமாறு கோரிக்கை!!

225

தவிசாளர் மீது தாக்குதல்

வவுனியா நகரசபைத் தவிசாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகரசபையின் நேற்றைய மாதாந்த அமர்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

வவுனியா நகரசபையின் தவிசாளரும் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரும் அண்மையில் சண்டையிட்டுள்ளனர். இங்கு யார் முதலில் தாக்கியது என எமக்குத் தெரியாது.

இது கௌரவப் பிரச்சினையாக இருப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் இருப்பதற்காக விடயம் தொடர்பாக எமது சபைக்குள்ளாகவே ஒரு விசாரணைக் குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.

அலுவலக நேரத்திற்குப் பின்னர் நகரசபை வளாகத்திற்குள் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது விவரங்கள் காவலாளியால் பதியப்பட வேண்டிய நடைமுறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.