அன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன் : சாதித்த தமிழன்!!

512


சாதித்த தமிழன்



டிஎன்பிஎல் தொடர் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார், தொடர் நாயகன் விருது பெற்ற பெரியசாமி. 2019ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் திண்டுக்கல்லை சாய்த்து, கிண்ணத்தை தட்டிச் சென்றிருக்கிறது சென்னை சேப்பாக் கில்லீஸ்.



தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் தான் பெரியசாமி. இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி, ஒட்டு மொத்த தொடர்நாயகன் விருதுக்கும் சொந்தகாரானார் பெரியசாமி. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏழை குடும்பத்தில் பிறந்த பெரிய சாமியின் தாயார் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார்.




தந்தை கணேசன் லொரி சாரதியாக இருந்து தற்போது உடல் நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாத பெரியசாமி ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வரை பல்வேறு வேலைகளை செய்து வந்திருக்கிறார்.


கிரிக்கெட்டில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்ட இளைஞர் ஒருவர் பந்து வீச்சு நுணுக்கங்களை பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல பரிசுகளை அள்ளிய பெரியசாமி,

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்திய பெரியசாமி தனது திறமையை தமிழகம் அறிய செய்துள்ளார். ஆடு மேய்த்த பெரியசாமி தற்போது கிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.