வவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு!!

392


பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்



வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.08) இடம்பெற்றது.



வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.




அதனைத் தொடர்ந்து நினைவுப்பேருரையை மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நிகழ்தியதுடன், உரையோவியத்தை எழுத்தாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கியிருந்தார்.


இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.


இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.

இதே சமயம் காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலரஞ்சலி செலுத்தியும் நினைவு கூரப்பட்டதுடன், பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பிலும் கருத்துரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.