வவுனியாவில் கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

894


கண் மருத்துவமனை



வவுனியாவில் கண் மருத்துவமனைக்கு இன்று (04.09.2019) அடிக்கல் நாட்டி வைத்தார் தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.



வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் ஆனந்தி கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இலண்டனை சேர்ந்த வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.




நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்வில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார்.


கண் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச செயலாளர் க.உதயராசா, வவுனியா நகரசபையின் உப நகரபிதா கு.குமாரசிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.