74 வயதில் இரட்டை குழந்தைகள்
இந்தியாவில் 74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரக்ஷாராமம் பகுதியை சேர்ந்தவர் மங்காயம்மா.
இவருக்கு ராஜா ராவ் என்பவருக்கும் 1962ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த இவர்கள் குழந்தை பெற்ற முடிவு செய்தனர். அதன்படி மாதவிடாய் காலம் முடிந்த மங்காயம்மாவுக்கு செயற்கை முறையில் மாதவிடாயை வரவழைக்க மருத்துவர்கள் முயல ஒரே மாதத்தில் மாதவிடாய் வந்தது.
இதன் பின்னர் ஜனவரி மாதத்தில் மங்காயம்மாவிற்கு செயற்கை கருத்தரிப்பு செய்யப்பட்டது. சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த மங்காயம்மாவுக்கு செப்டம்பர் 5ம் திகதி இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் மங்காயாம்மாவின் கணவர் ராஜா ராவுக்கு குழந்தை பிறந்த சில வாரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ராஜாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, நுரையீரல் தொற்று பிரச்னை காரணமாக அவர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அதே போல தொற்று நோய் பிரச்னை வரக்கூடாது என மங்காயம்மாவும் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார். இருவருமே நலமாக உள்ளனர். ஆனால் மங்காயம்மா மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார். இருவரும் ஞாயிறு அன்று தங்கள் குழந்தைகளுடன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரட்டை குழந்தைகளை தம்பதியின் உறவினர்கள் கவனித்து கொள்வார்கள் என கூறியுள்ளனர்.