வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்!!

476


வடக்கு மாகாண பண்பாட்டு விழா



வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இரு அமர்வுகளாக நடைபெற்றது.




வடக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் காலை அமர்வு அமரர் பொன் பூலோசிங்கம் அரங்கில் இடம்பெற்றது. இதில் கலைநிகழ்வுகள், ஆய்வரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.


மாலை அமர்வு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா ஜீபவதாஸ் தலைமையில் அமரர் வேலுப்பிள்ளை சிவசேகரம் அரங்கில் நடைபெற்றது. இதன்போது ஊடகம், புகைப்படம், நாட்டுக்கூத்து. நடனம், இசை, கலை உள்ளிட்ட 13 துறைகளுக்கான இளம் கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

இவ்விருதில் கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர் பரமசிவம் (சிவா) அவர்களுக்கு சிறந்த புகைப்பட துறைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


அத்துடன் மாலை அமர்வில் புத்தாக்க நடனம், பரதநாட்டியம், மங்கள இசை, றபான் நடனம், கிராமிய நடனம், முல்லைமோடி நாட்டுக் கூத்து உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.