சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று மாலை 5 மணிக்கு 182 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை உடனே விமானி கண்டுபிடித்தார்.
இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தொடர்பு கொண்டு விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்றும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர்.அதன் பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8 மணி அளவில் விமானம் கொழும்பு புறப்பட்டு சென்றது.