மீள இடம்பெறவுள்ள பரீட்சை
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 10 மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆண்டிறுதிப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை வினாத்தாள் வெளியாகியமையால், அப்பரீட்சை மீள நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வித் திணைக்கள வலயக்கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11, தரம் 10, தரம் 9 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற தரம் 10 மாணவர்களுக்கான ஆங்கில பாட பரீட்சை வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாகவே தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஊடாக வவுனியாவில் வெளியாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பரீட்சையானது எதிர்வரும் செவ்வாய் கிழமை மீள நடைபெறும் என வடமாகாண கல்வித் திணைக்கள வலயக்கல்விப் பணிமனை ஊடாக பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வினாத்தாள் வெளியாகியமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.