வேஷ்டி-சேலையில் அசத்திய வெளிநாட்டினர் : அசந்து போன கிராமத்தினர்!!

508

அசத்திய வெளிநாட்டினர்

வெளிநாட்டில் இருந்த வந்த சுற்றுலாப்பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தின் சென்னையில் இருக்கும் கிளாசிக் ரன் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டினர் பங்குபெறும் ஆட்டோ சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு கடந்த 12 வருடமாக ஏற்பாடு செய்து வருகிறது.

அதே போன்று இந்த ஆண்டும், ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த 28-ஆம் திகதி சென்னையில் துவங்கியது.

இதில், இத்தாலி, நியூசிலாந்து, ஹங்கேரி, சீனா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கலந்துகொண்டு ஆட்டோக்களில் 6 அணியாகப் பிரிந்து 6 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடி வந்தனர்.

தூத்துக்குடி வந்த அவர்கள் அங்கிருக்கும் பிரசிதி பெற்ற பனிமய அன்னை பேராலயம், முத்துநகர் கடற்கரை, உப்பளங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு தூத்துக்குடி அருகிலுள்ள சாயர்புரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக அழைத்து வரப்பட்டனர்.

அங்கு அந்த 6 அணியினருக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி, சட்டை கொடுக்கப்பட்டது.

அதை அணிந்து கொண்ட அவர்கள், அங்கு வந்து பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, அதே போன்று பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு குலவைச் சத்தமும் எழுப்பி அசத்தினர்.

அதன் பின் பொங்கல் வைத்து முடித்த பின், இந்த 6 அணியினரில் சிறப்பாக பொங்கல் வைத்த முதல் மூன்று அணி தெரிவு செய்யப்பட்டு, பரிசு கொடுக்கப்பட்டது. முதல் பரிசாக செவ்வாழைக் குலை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக நாட்டு வாழை ஆகியவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.