வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதம்!!

616


11 வீடுகள் சேதம்..



வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



வவுனியாவில் நேற்று (17.05) இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம், ஒமந்தை, வேலன்குளம், தேக்கவத்தை மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட,




அவுரம்துலாவ, அவுசதப்பிட்டிய ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


அத்துடன், ஈரப்பெரியகுளம் பகுதியில் வீதியின் குறுக்காக மரம் ஒன்று விழுந்த நிலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து அகற்றியிருந்தனர்.

காற்றுடன் கூடிய மழை காரணமாக பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அவ் வீடுகளில் வசித்த சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக தரப்பால் வழங்கியதுடன், வீட்டின் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்திருந்தனர்.


அவர்களுக்கான இழப்பீடாக முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.