வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 44 பேர் பாதிப்பு!!

348


வவுனியாவில்..



வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 குடும்பங்களை சேர்ந்த 44 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 13 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



வவுனியாவில் கடந்த இரு தினங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம், ஒமந்தை, வேலன்குளம், தேக்கவத்தை, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதலியார்குளம்,




கங்கன்குளம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அவுரம்துலாவ, அவுசதப்பிட்டிய ஆகிய மூன்று பிரதேச செயலக பகுதிகளில் வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


இதன்காரணமாக 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன், வீதிகளில் காணப்பட்ட சில மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அவை பாதுகாப்பு தரப்பின் உதவியுடன் அகற்றப்பட்டன.

காற்றுடன் கூடிய மழை காரணமாக பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அவ்வீடுகளில் வசித்த சில குடும்பங்களுக்கு தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கியதுடன், வீட்டின் பாதிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்திருந்தனர்.


அவர்களுக்கான இழப்பீடாக முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.