வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுப்பு!!

886

கொரோனா விழிப்புணர்வு..

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று(24.06.2020) காலை இடம்பெற்றது.

வவுனியா பழையபேருந்து நிலையத்தில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஆய்வாளர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன கொரோனோ வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வர்த்தக நிலையங்கள், முச்சக்கரவண்டிகள், பேருந்துகள் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கே.மகேந்திரன், வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு, வர்த்தகசங்க தலைவர் ச. சுஜன், செயலாளர் அம்பிகைபாகன், சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர் யெ.கெனடி,

சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன்,தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் பயணிகள் உட்பட பலா் கலந்துகொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு செயற்பாடு வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கொரோனா நிவாரண பணிகள் உட்பட பல சமூகப் பணிகள் வவுனியா மாவட்ட ஊடகவியாளா்களால் சமூகத்திற்கு முன் மாதிரியாக செய்யப்படுவது பாராட்டத்தக்கது எனவும் சங்கத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

நிகழ்விற்கான அனுசரணையை பிரித்தானியாவின் என்பீல்ட் நாகபூசணி் அம்மன் ஆலயம் வழங்கியிருந்தனா். நிகழ்வின் இறுதியில் சங்க செயலாளர் சற்சொரூபன் நன்றி தெரிவித்தார்.

ஏற்கனவே இவ்வாறு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னா் வழங்கியிருந்தனா். இது இரண்டாம் கட்ட விழிப்புணர்வு செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.