வடமாகாண ஆசிரியர் இடமாற்றமும் பரவலாக்கலும்

2124

நாட்டின் எதிர்காலச் சமூகத்தைக் கட்டியெழுப்பும் தூண்களான ஆசிரியர்கள் பல  பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதிலும் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர் இடமாற்றம். இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில் ஆசிரியர்களைப் பாடசாலைக்கு நியமிப்பதிலும், இடமாற்றம் வழங்குவதிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதிலும், இடமாற்றம் வழங்குவதிலும் உள்ள சமச்சீர் அற்ற நடவடிக்கைகள் காரணமாக சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாகவும் காணப்படுகின்றனர்.

இதேவேளை சில பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையாகவும் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் மேலதிகமாகவும் காணப்படுகின்றது. மாணவர்களின் கற்றல் அடைவுக்கு பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலுள்ள குறைபாடுகள் கணிசமான அளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. கல்வித்துறையினைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆசிரியர் வளம் முக்கியமான மனிதவளமாகப் பாடசாலைகளில் கருதப்படுகின்றது. இவ் வளங்களை முகாமை செய்வதிலுள்ள பிரச்சினைகள் காரணமாக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுவது கவலைதரும் விடயம் ஆகும்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் காணப்படுகின்ற போதும் வடக்கு மாகாணத்தின் ஆசிரியர் படையில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் படை யாழ் மாவட்டத்தால் உருவாக்கப்படுவதாகக் காணப்படுகின்றது. ஏனைய தொழில்துறைகளைப் பொறுத்தவரையில் அந்த அந்த மாவட்டங்களை நிரந்தர வசிப்படமாகக் கொண்ட ஊழியர் படையை கணிசமாகக் கொண்டுள்ளது. இதனால் அவர்களை  முகாமை செய்வதில் இடமாற்றம் வழங்குவதில் அவ் திணைக்களங்கள் பாரிய இடர்பாடுகளை என்னும் எதிர்நோக்கவில்லை. நாட்டின் அரச திணைக்களங்களில் என்பது வீதத்துக்கு மேற்பட்டவை நகர் அல்லது உப நகரங்களில் அமைந்துள்ளது. ஆனால் வடமாகாணத்தில்  பாடசாலைகள் பல கிராமங்களில் அமைந்துள்ளது. எனவே கல்வித்துறையில் நிலைமை மாறுபட்டது. எனவே தான் ஆசிரியர் நியமனமும், இடமாற்றங்களும் எப்போதும் வடமாகாணத்தின் பேசுபொருளாக இருக்கின்றது.

இலங்கையில் ஆசிரியர்; இடமாற்றம் வழங்குவதற்கு என தேசிய ரீதியான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை காணப்படுகின்ற போதும் மாகாணசபை அதிகாரத்தின் பிரகாரம் வடமாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை 2015.06.22 திகதி வடக்கு மாகாணசபை அமைச்சர் வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கொள்கையாக வெளியிடப்பட்டது. ஆனால் அவ் இடமாற்றக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் வடமாகாணக் கல்வியமைச்சு காட்டிவரும் மெத்தனப்போக்கு யுத்தத்தால் முற்றாக அழிவடைந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள மாணவர்களின் கல்வியை மேலும் பாதிக்கின்ற விடயமாகக் காணப்படுகின்றது. கல்வி அதிகாரிகளின் குறுகிய நோக்கமும் சில ஆசிரியர் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளுமே ஆசிரியர் இடமாற்றக் கொள்கையினை அமுல்படுத்த முடியாமைக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமைக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு மாகாண ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு படிப்படியாக தமது ஓய்வு காலங்களுக்கு அண்மையிலேயே சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுவரக் கூடியதாகக் காணப்பட்டது. அப்போது கல்வியமைச்சு மத்தியில் கொழும்பில் காணப்பட்டமையினால் தமது உறவினர், அயலவர் என செல்வாக்கினைப் பயன்படுத்தி இடமாற்றம் பெறமுடியவில்லை. வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை அரசியல் அமைப்பின் 13ம் திருத்த சட்டமூலத்துடன் தான் ஆரம்பமாகின்றது. 13ம் திருத்தின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாணசபையாக திருகோணமலையில் காணப்பட்ட போது பெருமளவு இடமாற்றப் பிரச்சினைகள் தோன்றவில்லை.

ஆயினும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு தனித் தனி மாகாண கல்வியமைச்சுகளாக மாற்றப்பட்ட பின்னர் வடமாகாணக் கல்வியமைச்சு யாழ் மாவட்டத்தில் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து தான் ஆசிரியர் இடமாற்றங்கள் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையினைத் தாண்டி நீதி நியாயம் இன்றி நடைபெறுகின்றது. தமக்கு உரிமை வேண்டும், அதிகார பரவலாக்கம் வேண்டும் என்று போராடிய ஒர் இனம் அந்த போராட்டத்தால் பெற்றுக் கொண்ட சிறிய அதிகாரப் பரவலாக்கலையே சரியாகப் பயன்படுத்தவில்லை. தங்களால் நிர்வகிக்கப்படும் மாகாணக் கல்வி அமைச்சினை  எவ்வாறு வினைத்திறனுடன் நிர்வகிக்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் பரவலாக்கல் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முதலாவது காரணி அரசியலமைப்பின் 13ம் திருத்தம் என சிந்திப்பதற்கு எம்மவர்களே காரணமாக அமைகின்றனர். அண்மைய காலங்களில் பத்திரிகைகளில் வெளிவருகின்ற மணிவிழா மலர்களில் ஆசிரியர்களின் சேவை விபரங்கள் நோக்குகின்ற போது சேவை ஆரம்பித்த காலம் தொடக்கம் சேவையிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை ஒரே கல்விக் கோட்டதிலேயே தமது சேவையினை முடித்தவர்கள் பலரை அவதானிக்க முடியும். அவ்வாறு எனின் ஏன் இடமாற்றக் கொள்கைகள்? ஏன் இடமாற்றச் சபைகள் இவை செல்வாக்கு அற்ற ஆசிரியர்களுக்கு மாத்திரம் தானா? என சிந்திக்கத் தூண்டுகின்றது.

ஒவ்வொரு ஆசிரியர்களும் நாட்டின் எப்பாகத்திலும் வேலை செய்வதற்கான உடல் உள தகுதியை பெற்றுள்ளனர் என மருத்துவச் சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தி தான் தமது சேவையில் பதவியை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் வசதியான பிரதேசங்களிலிருந்து இடமாற்றம் வரும்போது வெளியே சொல்ல முடியாத காரணங்களுடன் மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து அதிகாரிகளுக்கு கடிதங்களை வரைந்து தமது இடமாற்றத்தை நிறுத்துகின்றனர். வடமாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மருத்துவக் காரணங்களுக்கு அரச வைத்திய சபையின் சிபார்சு கருத்தில் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ள போதும் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி பெறும் மருத்துவச் சான்றிதழ்களுடனேயே பல ஆசிரியர்கள் தமது இடமாற்றத்தை நிராகரித்து வசதியான பிரதேசங்களில் தொடர்ச்சியாகக் கடமையாற்றுகின்றார். இவ் ஆசிரியர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படுகின்ற வரை இவ்வகையான இடமாற்றங்கள் பிரச்சினைக்குரியதாகவே காணப்படும்.

வடமாகாணக் கல்வியமைச்சின் தரவுகளின் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலுள்ள பன்னிரண்டு கல்வி வலயங்களிலும் ஆசிரியர் – மாணவர்  விகிதம் அண்ணளவாகச் சமனாகக் காணப்படுகின்றது. ஆனால் பாடரீதியாக நோக்குகின்ற போது நகர்புறம் தவிர்ந்த ஏனைய வசதி வாய்ப்புக்களற்ற பிரதேசங்களில் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. வவுனியா வடக்கு, துணுக்காய், மடு, கிளிநொச்சி போன்ற வலயங்களில் பிரதான பாடங்களுக்கே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

இதே போல இப் பிரதேசங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மருத்துவம் மற்றும் ஏனைய தேவைகளின் பிரகாரம் மாகாணக் கல்வியமைச்சுக்கு சென்று தற்காலிக இணைப்பைப் பெற்று குறித்த எண்ணிக்கையான ஆசிரியர்கள் வசதியான பிரதேசங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்களின் சம்பளம் தொடக்கம் பதிவுகள் எல்லாம் நிரந்தர வலயத்திலேயே காணப்படுகின்றது. இவையும் ஆசிரியர் – மாணவர் விகிதக் கணிப்புகளில் தாக்கம் செலுத்துகின்றது. இதேவேளை வடமாகாண கல்வியமைச்சால் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் நியமனங்களும் இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்களிலேயே வழங்கப்பட்டுள்ளன என்பதும் நோக்கத்தக்கது.

ஆசிரியர் இடமாற்றம் என்பது கல்வி தொடர்பான பிரதேச ரீதியான வேறுபாடுகளை முடியுமானவரை கட்டுப்படுத்தி மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை தடையின்றி தொடர்சியாக மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதே அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் வடமாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் முதல் நியமனத்தில் ஆசிரியராக கஷ்ட பிரதேசத்தில் நியமனம் பெறும் ஆசிரியர்களை ஆறு வருட முடிவில் தமது சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குதலையே இடமாற்றக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இவ்வாறான இடமாற்றக் கொள்கை காரணமாக என்னும் ஓர் இரு வருடங்களில் வடமாகாண கல்வியமைச்சு பாரிய நெருக்கடியினைச் சந்திக்கப் போகிறது.

ஒரு ஆசிரியர் வெளிமாவட்டங்களில் 6 வருடம் கஷ்ட பிரதேசங்களில் வேலை செய்துள்ளார் எனின் அவர் இடமாற்றம் பெறுவதற்கான தகுதியினைப் பெற்றுள்ளார். ஆனால் அதை அவர் யாழ் மாவட்டத்துக்கு இடமாற்றம் பெறுவதற்குகான தகுதியாகக் கல்வியமைச்சு கருதுகின்றது. அவ்வாறு கல்வியமைச்சு கருதுவதற்கும் ஒரு நியாயம் இருப்பதனை மறுக்க முடியாது. யாழ் மாவட்டத்தில் பல ஆசிரியர்கள் தமது சொந்த வலய கோட்டங்களிலேயே நியமனகாலம் தொடக்கம் கடமையாற்றுகின்றனர். அவர்கள் ஏனைய வலயங்களுக்கு ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று கடமையாற்றுவதற்கு தயாரில்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் கஷ்ட பிரதேசங்களில் முதல் நியமனம் பெற்று வெளிமாவட்டங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சினைகள், உடல் ரீதியான பிரச்சினைகள், குழந்தைப்பேறு, குடும்பத்தை தொடர்ச்சியாகப் பிரிந்து இருத்தல் போன்ற துன்பங்களைத் தொடர்ச்சியாக அனுபவிக்கின்றனர். இதனால் அவர்களின்;;; கற்பித்தல் ஊக்கம் குறைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை வடமாகாண கல்வியமைச்சு அண்மைய சில வருடங்களில் வழங்கிய முதல் நியமனங்களை வசதியான பிரதேசங்களிலேயே வழங்கி ஆசிரியர் இடமாற்றச் சுற்று வட்டத்தை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியிருக்கின்றது. இதேசமயம் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தீவுப்பகுதிக்கோ வடமராட்சி கிழக்குப் பகுதிக்கோ சென்று கடமையாற்றுவதற்கும் தயார் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதே போல் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்டிக்குளம், நெடுங்கேணி போன்ற பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி தவிர்க்கின்றனர். இது சில ஆசிரியர்களின் குறுகிய மனப்பாங்கை வெளிக்காட்டுகின்றது.

இதேசமயம் அதிகஷ்ட வெளிமாவட்டங்களில் முதல் நியமனங்கள் பெறுபவர்கள் வசதியுடைய பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு ஆறு, ஏழு வருடங்கள் தொடர்ச்சியான சேவையினைப் பூர்த்தியாக்க வேண்டும். ஆனால் யாழ் மாவட்டத்தில் வசதியுடைய பாடசாலைகளிலிருந்து வன்னிப் பகுதிக்கு இடமாற்றம் பெறும் ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளில் சொந்த வலயங்களில் மீண்டும் ஆசிரியராக இடமாற்றம் பெறலாம் என்ற சலுகை வழங்கப்படுகின்றது. இது ஆசிரியர்களைக் கல்வியமைச்சு பாகுபாடாக நடத்துகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு பாகுபாடு காட்டுதலை எதிர்கின்றது.

எனவே வடமாகாண கல்வியமைச்சு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே வகையான இடமாற்றக்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாய வெளிமாவட்ட சேவையினை ஆறு அல்லது ஏழு வருடங்களாக வழங்க வேண்டும். ஆறு அல்லது ஏழு வருடங்கள் கற்பிக்கின்ற போது தான் அந்த மாணவர்களின் அடைவுகளுக்கு அந்த ஆசிரியர் வகைகூற வேண்டியவர் ஆகின்றார். வெறுமனே மூன்று வருடங்கள் கடமையாற்றுவதால் அந்த பிரதேச மாணவர்கள் எந்தவித நன்மைகளையும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இதேவேளை வடமாகாண கல்வியமைச்சு  ஆசிரியர்களின் தரவுகளைப் பயன்படுத்தி இணைய வழிச் செயலிகள் மூலம் இடமாற்றத்;தைச் செயற்படுத்த வேண்டும். அப்போது தான் செல்வாக்கின் அடிப்படையில் வெளிமாவட்ட சேவையினைத் தவிர்த்து வருபவர்களின் விபரங்களை இனங்காண முடியும். தமது பி;ள்ளைகள் போலவே வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள பிள்ளைகளும் கல்வி பயில வேண்டும் என்கின்ற சமூக சிந்தனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறான சமூக சிந்தனை அற்ற ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களிடம் எவ்வாறு சமூக சிந்தனையுள்ள ஒரு  எதிர்காலச் சமூகத்தை எதிர்பார்க்க முடியும்.

இதேசமயம் வளமான ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஒரே பிரதேசத்தில் கடமையாற்றுவதனை தவிர்பதன் மூலம் அவர்களின் வளங்களை ஏனைய பிரதேச மாணவர்களும் பெற்றுக் கொள்வதற்கு ஆசிரிய இடமாற்றம் என்பது அவசியமானது. வேறுபட்ட சூழலில் ஆசிரியர்கள் தம்மை வளப்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பை ஆசிரியர்களுக்கு இடமாற்றம் தருகின்றது. இதேவேளை ஒரு பாடசாலையில் தொடர்சியாகக் கடமையாற்ற அனுமதிப்பதன் மூலம் நிர்வாகச் சிக்கல்கள், நிதிமோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. ஆசிரியர் தனித்தனிக் குழுக்களாகச் செயற்படல், நிர்வாகத்தைக் குழப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு பாடசாலையில் கடமையாற்றல் ஒரு காரணியாக இருக்கும். இது மாணவரின் கற்றலையும் பாதிப்படையச் செய்யும்.

இதேசமயம் வடக்கு மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பாடங்களுக்காக ஆசிரியர் பிரதான உற்பத்தி மையமாக யாழ் பல்கலைக்கழகமே காணப்படுகின்றது. ஆனால் அண்மைக் காலங்களில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. இது எதிர்காலத்தில் வடமாகாணத்துக்கு தேவையான  கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதை சிக்கலுக்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகின்றது.

எனவே இப்போது தொடக்கம் இந்த ஆசிரியர்களின் பரம்பலை சீராக்குவது மிகவும் அவசியமானது ஆகும். அதன் மூலம் வன்னிப் பிரதேசங்களில் மாணவர்கள் உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கணித, விஞ்ஞான பட்டதாரிகளை அந்த பிரதேசங்களில் உருவாக்குவதன் மூலம் அந்த அந்த பிரதேசத் தேவைகளை அந்த அந்த பிரதேச ஆசிரியர்;களை உருவாக்குவதன் மூலமே தீர்க்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதேவேளை வடமாகாணக் கல்வியமைச்சு அழகியல் பாட ஆசிரியர்களை ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கினால் யாழ் மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்குவதாகச்  சில ஆண்டுகளாகக் கூறுகின்றது. உண்மையிலேயே குறித்த பாடத்துறையில் அரச நிதியைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றவர்களின் வளங்களை விணாக்குகின்ற செயற்பாடாகவே இதனைக் கருதலாம்.  இவற்றை தவிர்த்து வெளிமாவட்ட சேவையை முடிக்காத அழகியற் பாட ஆசிரியர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றங்களை வழங்கி அதற்கு மாற்று ஒழுங்குகளை மேற்கொள்ள மாகாண கல்வியமைச்சு முயற்சிக்க வேண்டும்.

இதே வேளை ஆசிரியர் இடமாற்றத்தை ஓரளவு ஏனும் நீதியாகச் செயற்படுத்த வேண்டும். ஏனின் ஆசிரியர்களின் தரவுகள் அவர்களின் தனிப்பட்ட கோவைகளுடன் ஒப்பு நோக்கி கணனி மயப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இணையம் மூலமான செயலிகள் மூலம் செயற்படுத்தப்படல் வேண்டும். மருத்துவக் காரணங்களுக்காக இடமாற்றத்தை நிராகரிக்க  விண்ணப்பிக்கும் ஆசிரியர்களைக் கல்வியமைச்சு நியமிக்கும் அரச வைத்திய சபை முன் தோன்றி மருத்துவக் காரணங்களை உறுதிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

போதியளவு நேரசூசி இன்றிய ஆசிரியர், விபரங்கள் அதிபர்கள் மூலம் பெற்று பொருத்தமான பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற வசதியான பிரதேசங்களில் கடமையாற்றும் வெளிமாவட்ட சேவையில் ஈடுபடாத ஆசிரியர்களை இனங்கண்டு வயது அடிப்படையில் ஏழு வருடங்கள் கட்டாயம் வெளிமாவட்ட சேவைக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும். முதல் நியமனங்களை கட்டாயமாக வெளிமாவட்ட சேவைகளாகவே வழங்கப்படல் வேண்டும். பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு பத்து வருடங்கள் குறித்த பாடசாலையில் கடமையாற்ற நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டு நியமனங்களை வழங்க வேண்டும்.

இதே வேளை வடமாகாணக் கல்வியமைச்சு, கல்வித் திணைக்களம் என்பவை வடமாகாணத்தின் மையமான மாங்குளப் பிரதேசத்திற்கு இடமாற்றப்படல் வேண்டும். இதன் மூலம் வன்னிப் பிரதேச மாணவர்கள் கற்றலுக்காக ஆசிரியர்களை வேண்டி தவிக்கும் தவிர்ப்பு கல்வி நிர்வாகிகளுக்குப் புரியும். அதேசமயம் கல்வியமைச்சு யாழ் மாவட்டத்தில் இருப்பதால் தமது இடமாற்றத்தை இலகுவாக கல்வியமைச்சில் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் உறவுகளைக் கொண்டு தவிர்பதும் தடைப்படும்.

இதேவேளை கஷ்டப் பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்றுவதுடன் கல்வியமைச்சின் கடமை முடிந்து விடவில்லை அவர்களுக்கு கவர்ச்சிகரமாக கொடுப்பனவை வழங்குதல், விடுதி வசதிகளை வழங்குதல், இலவசப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல், கஷ்டப்பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்குப் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தரல், குறைந்த வட்டியுடனான கடன்கள், பதவியுயர்வின் போதான சலுகைகள் என்பன போன்ற முற்போக்கான திட்டங்களை வடமாகாண கல்வியமைச்சு மத்திய கல்வியமைச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இதே சமயம் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் விசேட வகுப்பு ஒன்றை உருவாக்குதல் மூலம் ஆசிரியர்களின் வெளிமாவட்ட சேவையினை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் மனங்களில் குறுகிய மனப்பான்மை அகன்று சமூக சிந்தனை உருவாகும் வரை வடமாகாண ஆசிரியர் இடமாற்றம் என்பது வடமாகாணத்தின் பேசுபொருளாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

இராமச்சந்திரன் நிர்மலன்

ஆசிரியர்

(இணையத்திலிருந்து)