வவுனியாவில் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் 38 பேருக்கான நியமனம் வழங்கி வைப்பு!!

1704

சுபீட்சத்தின் நோக்கு..

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 38 பேருக்கான நியமனங்களை வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் வழங்கி வைத்தார். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகத்தில் இன்று (26.10) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதற்கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதற்கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் சிபாரிசிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 38 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்கள் வழங்கப்படுவதுடன்,

பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் அவரது இணைப்பாளர்கள் மற்றும் நியமன பெறுனர் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.