பொறுப்புக்களில் இருந்து தவறிய பொது மக்கள் : ஜனாதிபதி குற்றச்சாட்டு!!

592


ஜனாதிபதி குற்றச்சாட்டு..



கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தவறியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாடு தற்போதைய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



ஜனாதிபதி பணிக்குழு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கொரோனா வைரஸின் பரவலை அரசாங்கத்தால் மட்டுமே கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.




பொதுமக்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது என்றும், அந்த பொறுப்பில் இருந்து அவர்கள் தவறியுள்ளமையால் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


மேல் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, பலர் கொழும்பிலிருந்து காலி மற்றும் எல்ல போன்ற இடங்களுக்கு சென்றதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது மிகவும் பொறுப்பற்ற செயல் என்று கூறிய அவர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை அரசாங்கத்தால் மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.


கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்போரை யாரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூடாது. இதன்போது அவர்களுக்கும் வைரஸ் பரவலாம். இதற்கு பதிலாக சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

-தமிழ்வின்-