மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
இலங்கையில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது, எனினும் விடுவிக்கப்படுகின்ற பகுதிகள் இன்னும் பாதுகாப்பாக இல்லை என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கொரோனா பரவுவதற்கான ஆபத்து நாட்டில் இன்னும் நிலவுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவது மிகவும் முக்கியமானது. ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது என்பது மக்கள் தங்கள் வழக்கமான செயற்பாடுகளுக்கு செல்லலாம் என்பதற்கான அர்த்தம் அல்ல.
எனவே ஆபத்து நாட்டில் இருந்து இதுவரை அகற்றப்படவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். அத்துடன், பேலியகொடை மீன் சந்தை தொடர்பான தொற்றுக்கள் இன்னும் பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் தேவையற்ற பயணங்களை கட்டுப்படுத்துவது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.