Dr. எஸ்.கிருபானந்தகுமாரன் [ MVSc ]

கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்

அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் [ Lumpy skin disease ]  எனும் ஒரு வகை  பெரியம்மை நோய் வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்கள் காணப்படும் இந்த நோய் இதற்கு முன் இலங்கையில் இருந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தை கணிசமான அளவு பாதிக்கத்தக்க நோயாக இது காணப்படுகிறது. விரைவாக பரவலடையும் ஆனால் மிகக் குறைந்தளவு இறப்பு வீதத்தை ஏற்படுத்தும் நோயாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.  [ high morbidity and low mortality.]

உலகில் முதன் முதலில் ஸாம்பியா எனும் தென் ஆபிரிக்க நாட்டில் 1929 ஆம் ஆண்டு அவதானிக்கப்பட்ட  இந்த நோய்  ஏனைய ஆபிரிக்க , எகிப்து , இஸ்ரேல் போன்ற மத்திய கிழக்கு நாடுகளையும் அடிக்கடி தாக்கியிருந்தது. இந்தநோய் இப்போது வரை ஆபிரிக்க ,மத்திய கிழக்கு பகுதிகளின் பொதுவான நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [ endemic in African and Middle East countries ]  அங்கு இதற்கு தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. கடந்த 2௦19 ம் ஆண்டின் ஆரம்பத்தில் பங்களதேஷ் மற்றும் சீனா , வியட்நாம் போன்ற  நாடுகளில் அவதானிக்கப்பட்ட இந்த நோய் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் முதன் முதலில் [ ஒகஸ்ட் 2019 ] அவதானிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் உள்ள ஆய்வு கூடம் [ National institute of high security animal disease] இந்த நோயை உறுதிப்படுத்தியிருந்தது. இதன் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட ஏனைய  இந்தியாவின் மாநிலங்களிலும் வேகமாக பரவிய  இந்த நோய் இலங்கையின் வடக்கின் சில பகுதிகளில்  இந்த வருட யூலை ஆகஸ்ட் மாதங்களில் அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த நோய் அண்மைய நாட்களில் பெய்த மழையின் பின்னர் மிக வேகமாக பரவலடைய தொடங்க மக்களின் மனதில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றியுள்ளது. இந்தியாவில் இருந்து சட்ட விரோத கடத்தல்காரர்கள்களின் படகுகள் மூலம் இலங்கைக்கு இது பரவியிருக்கலாம் என்பது எனது கருத்தாகும். இந்த நோயை கடத்தும் பூச்சிகள் முப்பது கிலோமீட்டர் வரை பறக்க கூடியன என்பதும் இலங்கைக்கு பரவ எதுவாக அமைந்திருக்கலாம். மழைகாலத்தின் பின்னரான நுளம்புகளின் பெருக்கம் மேலும்  இந்த நோய் தீவிரமாக  பரம்பலடைய செய்திருக்கலாம்.

 

இன்றைய திகதிக்கு நான் கடமையாற்றும் வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் தினமும் சராசரியாக 15 – 2௦ வரையான முறைபாடுகள் எனக்கு இந்த நோய் தொடர்பாக கிடைக்கபெறுகின்றன. இதே போன்ற நிலைதான ஏனைய பெரும்பாலான கால்நடை பிரிவுகளிலும் காணபடுகிறது. இது தொடர்பாக இலங்கையின் கால்நடை நோயியல் பிரிவு பல ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. எனது பிரிவிலிருந்தும் இந்த நோய் தொடர்பான மாதிரிகளை வவுனியா மாவட்ட விலங்கு புலனாய்வு நிலைய வைத்தியர்  சேகரித்து அனுபியுள்ளார். இலங்கையில் இது தொடர்பான மேம்படுத்தப்பட்ட ஆய்வு கூடங்கள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு  மேற்படி மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரையின் நோக்கம் மேற்படி பெரியம்மையின் விஞ்ஞான பூர்வமான தன்மைகளையும் சிகிச்சை முறைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதாகும்.

இந்த நோய் Poxviridae குடும்பத்தையும்  Capripoxvirus பிரிவையும்  சேர்ந்த lumpy skin disease virus (LSDV) எனும் இரட்டை இழை DNA  வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது.  மிக அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறது. மேற்படி வைரஸ் அடங்கும் கூட்டத்தில் நெருங்கிய ஆட்டு அம்மை மற்றும் செம்மறி ஆட்டு அம்மை போன்ற வைரஸ்கள் காணப்பட்டாலும் இந்த நோய் ஆடு,மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படாது. இதுவரை மனிதனுக்கு தொற்றியதாக  தெரியவில்லை. சகல வயது மாடுகளையும் தாக்கும் இந்த நோய் குறிப்பாக இளம் கன்றுகளிலும் பால்கறக்கும் மாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக இறப்பு வீதம் மிக குறைவான போதிலும் சரியாக கவனிக்க படாத குறிப்பிடத்தக்க இளம் கன்றுகள் இறந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டு மாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. இந்த நோய் அந்தந்த மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பாலுற்பதி குறைதல், உணவு உட்கொள்ளுதல் குறைதல், கன்றுகளில் வளர்ச்சி குன்றுதல் ,உடல் மெலிவடைதல்  தோலில் நிரந்தர அடையாளம் ஏற்படுதல் , பசுக்களில்  கருச்சிதைவும்  ஆண்மாடுகளில் மலட்டு தன்மையும்  ஏற்படுதல் போன்ற காரணிகளால் அதிக பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகிறது. கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட  மாடுகளை பார்க்கும் பலர் மாட்டிறைச்சி உண்பதை விரும்பாத நிலையும் பால் குடிக்காமல் விடும் நிலையம் ஏற்படுகிறது. என்னிடம் பலர் இது தொடர்பாக தொடர்ச்சியாக வினவியிருகிறார்கள் .உண்மையில் அதிக வெப்பத்தில் சமைக்கும் போது மேற்படி வைரஸ் அழிவதால் சரியாக சமைத்து உண்ணும் இறைசிக்கோ சரியாக கொதிக்க வைத்து குடிக்கும் பாலையோ பார்த்து பயப்படத் தேவையில்லை.

இந்த நோய் பிரதானமாக நுளம்பு , உண்ணிகள் , மாடுகளை கடிக்கும்  ஈக்களால் பரவுகிறது. குறைந்தளவில் நோயுற்ற மாடுகளின் நேரடி தொடுகை  ,இனக்கலப்பின் போது விந்து மூலமாக  சினைப்பட்ட மாடுகளில் இருந்து கருப்பை வழியாகவும்  பாலின் மூலமும்  கன்றுக்கும் பரவுகிறது . எனினும் மேற்கூறிய நுளம்புகள் உண்ணிகள் மற்றும் கடிக்கும் ஈக்களாலே பெரும்பாலும் இந்த நோய் பரவலடைகிறது. அத்துடன் மாடுகளில் இந்த வைரஸ் 35 நாட்கள் வரை மாடுகளில் வாழக்கூடியது.

நோய் ஏற்படும் மாடுகளில் முதலாவது அறிகுறியாக கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடியும். சரியாக கவனிக்க படாத கண் கூடிய வாய்ப்பும் உள்ளது. மூக்கிலிருந்து சளியும் வாயிலிருந்து எச்சிலும் வடியும்.  காய்ச்சல் ஏற்படும். உணவு உட்கொள்ளாது. நிணநீர் சுரபிகள் வீக்கமடையும். சிறிய கட்டிகள் தலை கழுத்து மூக்கு வாய் மார்பு முதுகு , கால்,  மடி பிறப்புறுப்புகள் அடிவயிறு என சகல பகுதிகளிலும் தோன்றும். கட்டிகள் தோலில்  இருந்து உயர்ந்து வீங்கி காணப்படும். உடல் அசதி காரணமாகவும் கால்களில் ஏற்படும் வீக்கம் காரணமாகவும்  நடக்க மாட்டாது நொண்டும். மடி மற்றும் முலைப் பகுதியில் தோன்றும் கட்டிகளால் மடியழற்சி ஏற்படும். சில மாடுகளில் பல சிறிய கட்டிகள் நிணநீர் முடிச்சுகளுடன் சேர்ந்து மேற்கூறிய இடங்களுள் பெரிய அளவில் காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடிய மாடுகளில் கட்டிகள் சிறிய அளவிலும் விரைவாகவும் சுகமாகி விடும். அதி தீவிரமாக பாதிக்கப் பட்ட சில மாடுகளில் கட்டிகள் சீழ் பிடித்து உடையும்.கவனிக்காது விட்டால் புழு வைக்கும். இந்த காயங்கள் துப்பாகியால் சுட்ட காயம் போல காணப்படும். இதனால் தோலின் பெறுமதி குறையும். சில மாடுகளில் நுரையீரல் பாதிக்கப்பட்டு நியுமோனியா நிலைகூட ஏற்படும். சினைப்பட்ட மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். மாடுகளுக்கு இந்த நோய் ஒரு முறை வந்தால் மீளவும் வராது.

இந்த நோயை வெற்றுக் கண்ணால் பார்த்தவுடன் அறிந்து கொள்ள முடியும். இலத்திரன் நுணுக்கு காட்டி மூலம் பார்க்கும் போது வைரசை இலகுவாக கண்டறியலாம்.  PCR பரிசோதனை மூலம் மிக சரியாக நோய் நிலையை உறுதி படுத்தலாம்.

ஆபிரிக்க நாடுகளில் இந்த நோய்க்கு தடுப்பூசி காணப் படுகின்ற போதும் இலங்கை இந்தியாவில் இதுவரை தடுப்பூசி இல்லாத காரணத்தால் நோய் அறிகுறிகளை குறைப்பதும் இரண்டாம் நிலை நுண்ணங்கி தொற்றை குறைப்பதும் சிகிச்சையில் செய்ய வேண்டும்..

கண்ணில் நீர்வடியும் போது கண்ணுக்கு  பயன்படுத்தும் மருந்து துளிகளை பயன்படுத்தலாம். வீக்கம்,காய்ச்சலை குறைக்கும் மருந்துகளையும் தோலை ஊடுருவி நுண்ணங்கி தொற்றை குறைக்கும் சரியான நுண்ணுயிர் கொல்லிகளை கால்நடை வைத்தியர் ஆலோசனையின் படி பயன்படுத்தலாம்.காயம் ஏற்பட்டு இருந்தால் அதற்குரிய சிகிச்சையையும் செய்ய வேண்டும்.

அத்துடன் இந்தியாவில் பாரம்பரிய  மருத்துவ முறைக்குள் பயன்படுத்தபடுகின்றன. எனது கருத்தின் படி நவீன கால்நடை மருத்துவத்தையும்  பாரம்பரிய மருத்துவத்தையும் கால்நடை வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சமாந்தரமாக செய்து வரும் போது விரைவாக பலனை பெற முடியும்.  மாடுகளுக்கு நோய் எதிர் சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய பொருட்களை வழங்கும் போது அவை விரைவாக குணமடைகின்றன. உடல் ஆற்றல் குறைவடைந்த மாடுகளுக்கு வைட்டமின் மற்றும் கனியுப்புகளை வழங்க வேண்டும்.

  • நுளம்புகள் ஏனைய பூச்சிகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும் பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.நோய் ஏற்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தியும் அந்த மாடுகளை தேவையில்லாமல் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்த வேண்டும்.மேலும் மாடுகள் கூட்டமாக மேயும் நிலையை தவிர்த்தல் வேண்டும். இந்த நோய் நிலைமை இருக்கும் பகுதிகளில் இருந்து இல்லாத இடங்களுக்கு மாடுகளை பிரயாணம் செய்வதை தவிர்த்தல்/தடுத்தல் வேண்டும்.புதிதாக வாங்கும் மாடுகளை சில வாரங்கள் தனிமை படுத்தியே [Quarantine] ஏற்கனவே இருக்கும் மாடுகளுடன் சேர்க்க வேண்டும். கால்நடை சிகிச்சையாளர்கள் மாடுகளுக்கு மருந்துகளை ஏற்றும் ஒவ்வொரு தடவையும் புதிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். இறந்த மாடுகளை சரியான முறையில் எரித்தோ சுண்ணாம்பு சேர்த்து ஆழமாக புதைத்தோ அகற்ற வேண்டும்.

மனிதர்களை மிரட்டிக்க கொண்டிருக்கும் கொவிட் 19 நோய் போலவே மேற்படி லம்பி தோல் நோயை பரப்பும் நோய் காரணியும் வைரஸ் நச்சுயிரியே. ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு விதமாக தமது செயற்பாட்டை மாற்றக் கூடிய நச்சுயிரி வைரஸ்கள் எதிர்காலத்தில் வேறு விதமாக வரலாம். இதனை தவிர்க்க பண்ணை சுகாதார நடைமுறைகளையும் விலங்குகளில் இருந்து ஏற்படும் நோய்கள் உட்பட எந்த நோய்களும் மனிதர்களுக்கு தோன்றாமல் இருக்க தனிமனித சுகாதார நடை முறைகளையும் கடைப்பிடிப்போமாக.

Dr. எஸ்.கிருபானந்தகுமாரன் [ MVSc ]

கால்நடை வைத்தியர் .செட்டிகுளம்