அன்று சாதாரண ஆசிரியராக இருந்து பெரும் கோடீஸ்வரர் ஆன நபர் : திடீரென 1 லட்சம் கோடி ரூபாயை இழந்த பரிதாபம்!!

1365

ஜாக் மா..

சீன அரசின் நடவடிக்கைகளால், அலிபாபா நிறுவனர், ஜாக் மாவின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவடைந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன், சாதாரண ஆசிரியராக இருந்தவர், ஜாக் மா. இவர், வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்கும், அலிபாபா நிறுவனத்தை துவக்கியதன் மூலம், குறுகிய காலத்தில் சீனாவின் பெருங் கோடீஸ்வரராக உருவெடுத்தார். இவரது சொத்து மதிப்பு, 4.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

இரு மாதங்களுக்கு முன், வலைதளத்தில் நிதிச் சேவைகளை வழங்கும் ஆன்ட் நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், ஜாக் மா, 2.62 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டார்.

இதையடுத்து, சீன அரசு விழித்துக் கொண்டது. ஆன்ட் மூலம், ஜாக் மா, அரசு வங்கித் துறையை ஆட்டம் காண வைத்து விடுவார் என அஞ்சியது. அதனால், ஆன்ட் பங்கு வெளியீட்டிற்கு சீன அரசு தடை விதித்தது.

அதுமட்டுமின்றி, அலிபாபா, டென்சன்ட் நிறுவனங்கள் கடந்த காலத்தில் கையகப்படுத்திய நிறுவனங்களின் வரலாறை தோண்டி எடுத்து, சட்ட மீறல்கள் நடந்துள்ளதாக கூறி, அபராதம் விதித்தது.

ஜாக் மா, சீனாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவங்களால், ஜாக் மா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, இரண்டு மாதங்களில், 25 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

அவருடைய சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவடைந்தது. எனினும், அவர், தற்போது, 3.62 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன், ‘போர்ப்ஸ்’ இதழின், உலகின், 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.