வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்படும் வர்த்தக நிலையங்கள்!!

5379

கொரோனா அச்சம்…

வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பகுதி அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த 55 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றமையுடன் இனங்காணப்பட்ட 55 பேருடனும் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களை சுகாதார துறையினர் திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இன்று (08.01) இரவு முதல் மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரினால் மூடப்பட்டுள்ளமையுடன் மக்கள் உள் நுழையவும் வெளிச்செல்லவும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்துள்ளனர்.