வவுனியா மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் கடந்த ஒரு வருடத்தில் 1050 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 685 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது விலைக் குறிப்பினை அகற்றுதல், உருவழிக்கின்ற அல்லது விலை மாற்றம் போன்ற குற்றச்சாட்டில் 210 வர்த்தகர்களுக்கு எதிராகவும், குறிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு எதிராகவும்,
எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தல் அல்லது களஞ்சியப்படுத்தல் போன்ற குற்றச்சாட்டில் 12 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும்,
பண்டங்கள் உடமையில் இல்லை என மறுத்த குற்றச்சாட்டில் ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும், விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்தல், விற்பனைக்காக வைத்திருத்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்த தவறிய 98 வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும்,
வியாபார பொருட்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதிகபட்ச சில்லறை விலை அல்லது மொத்தவிலை காட்டப்படும் அறிவித்தல் சகல வியாபாரிகளினாலும் வியாபார தளத்தில் வெளிப்படையாக தோன்றும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் அதை தவறிய 118 வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும்,
ஏமாற்றும் நடத்தையில் அல்லது பொய்யான திரித்துக் காட்டல்கள் நடவடிக்கையினை மேற்கொண்ட 228 வர்த்தகர்களுக்கு எதிராகவும் என 685 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கைகளுக்காக கடந்த ஒரு வருடத்தில் வாகன செலவு மாத்திரம் 7,33,025 ரூபா செலவாகியுள்ளதுடன் 13635 கிலோமீற்றர் தூரமும் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.