வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவரும் மகா சிவராத்திரி!!

2880


மகா சிவராத்திரி..



வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடும், சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் இன்று (11.03.2021) சிறப்பாக இடம்பெற்றது.



வவுனியா, கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.




இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்த அடியார்கள் புடைசூழ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் பூஜைகளும் இடம்பெற்றன.


அத்துடன் இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் சிவராத்திரி நன்நாளில் ஆலயத்தில் இடம்பெற்றது.

அந்தண சிவாச்சாரியார்கள் முன்னிலையில் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றாகிய தீட்சையினை பக்த அடியார்கள் பலரும் அமர்ந்து இருந்து குரு சீட முறையில் சிரத்தையுடன் பெற்றுக் கொண்டனர்.


மேலும், அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களையும் இதன்போது நிறைவேற்றி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானின் அருட் கடாற்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் சுகாதாரப் பிரிவினரும், பாதுகாப்பு கடமையில் பொலிசாரும் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.