தொடர்ந்தும் மலேசியாவை சூழ்ந்துள்ள மாசு மண்டலம்..!

423

இந்தோனேசியாவின் காட்டுத் தீயினால் பரவிவரும் புகை-மாசு மண்டலம் மலேசியாவின் பல பகுதிகளை இன்னும் சூழ்ந்துகொண்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் எதிரில் இருப்பவை சரியாக தெரியாதபடி மாசுமண்டலம் மூடியிருந்தது.

கோலாலம்பூரிலும் செலாங்கோர் மாநிலத்திலும் பள்ளிக்கூடங்களை மூடிவிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு தென் மாவட்டங்களில் மாசு மண்டலத்தின் அளவு அதிகரித்திருந்ததால் மலேசியா அவசரநிலை பிரகடனம் செய்திருந்தது.

சிங்கப்பூரில் காற்றின் போக்கு மாறியுள்ளதால் வானம் தெளிவாக மாறிவருகிறது.

இதற்கிடையே, செயற்கையாக மழையை பெய்ய வைக்கக்கூடிய ‘கிளவுட் ஸீடிங்’ தொழிநுட்ப முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக இந்தோனேசியா கூறியுள்ளது.

இதன்மூலம் சிறிதளவு மழைத்தூறல்களைத் தான் வரவழைக்க முடிந்துள்ளது.

தமக்கும் செய்வதற்கு வேறுவழிகள் இல்லையென்று அந்நாட்டின் இடர் மேலாண்மை அமைச்சர் தெரிவித்தார்.