மனைவின் நகைகளை விற்று பல உயிர்களை காப்பாற்றும் ஆட்டோ சாரதி : இப்படியும் ஒரு மனிதன்!!

918

ஜாவித் கான்..

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது சொந்த ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பல நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலேயே இறக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன.

அது போல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஆம்புலன்ஸ்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போபாலை சேர்ந்த ஒருவர் என்ன செய்துள்ளார் என்பதை பாருங்கள்.

போபாலை சேர்ந்தவர் ஜாவித் கான் (34). இவர் ஆட்டோ ஓட்டுநர். கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்கள் படும் துயரங்கள் குறித்தும் அன்றாடம் டிவியிலும் பேப்பர்களிலும் படித்து தெரிந்து கொண்டார் ஜாவித். சில சம்பவங்கள் கண்ணாலும் பார்த்துள்ளார். ஆட்டோ ஓட்டும் தன்னால் என்ன செய்ய முடியும் என யோசித்தார்.

உடனே மனைவியிடம் நகைகளை கேட்டார். அந்த நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றினார். அதில் ஆக்ஸிஜன் வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 8 முதல் 10 பேரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

இதற்காக ஜாவித் எந்த கட்டணத்தையும் வாங்குவதில்லை. ஜாவித் தனது செல்போன் எண்ணை சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காத பட்சத்தில் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தினமும் ஆக்ஸிஜனை நிரப்ப ரூ 600ஐ ஜாவித் செலவிடுகிறார்.

இதற்காக ஆக்ஸிஜன் நிரப்பும் மையங்களில் 4 முதல் 5 மணி நேரங்கள் வரை காத்திருக்கிறார். கைவிட்டு செலவு செய்து வந்தாலும் அவர் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதில்லை. மாறாக நோயாளிகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவைகளை பலர் பாராட்டி வருகிறார்கள். கொரோனா நெருக்கடி நேரத்தில் அன்றாடம் ஹீரோக்கள் உருவாகிறார்கள்.