நிதி நிறுவனங்கள்..
இலங்கை மத்திய வங்கியின் சுற்றறிக்கைக்கு அமைவாக வவுனியாவில் மூடப்பட்ட நிதி நிறுவனங்களை மீள திறக்க அனுமதி வழங்குமாறு நிதி நிறுவனங்கள் கோரியுள்ளன.
வவுனியா நகரப் பகுதியில் பயணத்தடைக் காலப்பகுதியில், சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 5 நிதி நிறுவனங்கள் பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரால் நேற்று (08.06) மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன. அத்துடன் குறித்த நிதி நிறுவனங்களில் பணியாற்றும் 45 பேருக்கு பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 24/06/001/0001/009 ஆம் இலக்க 4 ஆம் திகதி சுற்றறிக்கைக்கு அமைவாக நிதி நிறுவனங்கள் இயங்குவதற்கும், மக்களின் அவசிய தேவைகளுக்கு கொடுக்கல் வாங்கல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாபக பணம் வைப்பு செய்தல், பணம் மீளப்பெறல், நகை அடைவு சேவை என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வவுனியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் அனுமதியளிக்க வேண்டும் என நிதி நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.