மேற்கு ஐரோப்பாவில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் : 150 பேர் பலி : 1300 பேர் மாயம்!!

776

மேற்கு ஐரோப்பாவில்..

மேற்கு ஐரோப்பா முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தில் தப்பியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ள அனர்த்தத்தில் குறைந்தது 150 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பதிவாகியுள்ள மழையால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்திலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த நாட்டின் தென் மாகாணத்தில் பிரதமர் மார்க் ருட்டே தேசிய அனர்த்த நிலைமையை அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய தலைவர்கள் காலநிலை மாற்றம் குறித்த தீவிர வானிலைக்கு குற்றம் சாட்டியுள்ளனர். ஐரோப்பாவின் பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பெல்ஜியத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, நெதர்லாந்து, லக்சம்பர்க், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 106 பேர் ஜேர்மனியில் மாத்திரம் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோரை காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியில் சுமார் 15,000 பொலிஸார், இராணுவ வீரர்கள் மற்றும் அவசர நிலை பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஜேர்மனிய மாவட்டமான அக்விலரில் 1,300 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மனித செயற்பாடுகளினால் தூண்டப்படும் காலநிலை மாற்றம் இதுபோன்ற மோசமான மழைவீழ்ச்சியை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார்.