21வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்த பெண்!!

1095


பேஸ்புக் மூலம்..



இலங்கையில் 21 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது கணவனை பேஸ்புக் மூலம் பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கந்தான, ஆனியாகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.



அந்த புகைப்படத்தில் இருப்பவர் 21 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன தனது கணவர் என கூறி மனைவி தேடி வந்துள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




குருவாவ, ரத்தோட்டை மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 70 கே.ஜீ.பியசேன என்ற நபரே தனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அந்த நோயாளி உறவினர்கள் யாருமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால்,


வைத்தியசாலையின் தாதி அவர் தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருந்த கணவனை அடையாளம் கண்ட அவரது மனைவி,

வைத்தியசாலைக்கு தேடி சென்றுள்ளார். காலில் பெரிய காயங்களுக்குள்ளான நபர் உரிய நினைவாற்றலில் இல்லை என்ற போதிலும்,


மனைவி அவரே தனது கணவர் என அடையாளம் கண்டுள்ளார். 21 வருடங்களின் பின்னர் தனது கணவனை தன்னுடன் சேர்க்க பேஸ்புக் உதவியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.