மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவிட்ட புகைப்படம் : நிலச்சரிவில் சிக்கிய இளம் மருத்துவர்!!

1014

இமாச்சல பிரதேசத்தில்..

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் மரணமடைந்ததுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், குறித்த விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ள இளம் மருத்துவர் தொடர்பில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் இந்தியாவின் கடைசி புள்ளியில் உள்ளேன் என்று குறிப்பிட்டு மருத்துவர் தீபா ஷர்மா மரணத்திற்கும் சில நிமிடங்கள் முன்பு பதிவு செய்த புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.

அவரது சமூக ஊடக பக்கம் முழுமையும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்த புகைப்படங்களால் நிரம்பியுள்ளது. இதனிடையே, இமாச்சல பிரதேசத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார்.