இந்திய அணியை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!!

912

இலங்கை அணி..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடந்த மூன்று போட்டிகளை கொண்ட் இருபதுக்கு இருபது தொடரில், இலங்கை அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் இந்திய அணி பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் குல்திப் யாதவ் 23 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. இந்தியாவிற்கு எதிராக இருபதுக்கு இருபது தொடரை வென்ற முதலாவது சந்தர்ப்பமாக இலங்கைக்கு இது அமைந்துள்ளது.