வவுனியா உட்பட இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

2149

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையின் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வட-மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பொது மக்கள் புயல் மற்றும் மின்னலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள், இடி மற்றும் மின்னலின் போது, மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வயல் வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளில் இடியுடன் கூடிய மழைக்காலங்களில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது கம்பி இணைப்புத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மற்றும் ஈருருளிகள், உழவு யந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் கேட்டுள்ளது.