வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இரு இளைஞன் தற்கொலை முயற்சி : ஒருவர் மீட்பு!!

5956

தொலைத்தொடர்பு கோபுரத்தில்..

வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இரு இளைஞர்கள் இன்று மதியம் தொடக்கம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த நிூலயில் கடும் முயற்சியின் மத்தியில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இருவரின் ஓர் இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வருகைதந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.

இந்நிலையில் குடும்பத்தினரை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில்,

குறித்த இளைஞரும் தனது அண்ணியினை மீட்டுத்தருமாறு கோரி அவரது உடன்பிறவாத சகோதரனும் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன் அப் பெண்ணின் கணவர் கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என,

கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரன்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

இதேவேளை குறித்த இளைஞரை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.

அதன் பின்னர் பல மணிநேர போராட்டத்தின் மத்தியில் அவ் இளைஞரின் சகோதரன் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞரை மீட்கும் பணியில் பொலிஸாருடன் இணைந்து வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.