வவுனியா கனகராயன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்!!

3270


கனகராயன்குளத்தில்..



கனகராயன்குளம் பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரமும், ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்துள்ளதாக கனராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.



இன்று (27.10) இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் உழவு இயந்திரம் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஏ9 வீதியில் புளிங்குளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது,




அதே வீதி வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் கனராயன்குளம் பகுதியில் வைத்து கழிவகற்றும் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தையடுத்து ஹயஸ் ரக வாகனம் வீதியை விட்டு விலகி தடம் புரண்டதுடன், கழிவகற்றும் உழவு இயந்திரமும் கடும் சேதத்திற்கு உள்ளாகியது.

குறித்த விபத்தில் இரு வாகனங்களிலும் பயணித்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.