இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்?

1155

சமையல் எரிவாயு..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி தற்போது எரிவாயு வெளியிடப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள நிலைமையை சீரமைக்க சிறிது காலமாகும் என அவர் கூறியுள்ளார்.

இந்த செயல்முறை தினசரி உற்பத்தி திறனை 50 சதவீதம் குறைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய நிறுவனங்களுக்கு மீண்டும் எரிவாயு கொண்டு வரப்பட்டமையினாலேயே எட்டு நாட்களாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, நிலவி வந்துள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நெருக்கடியை குறைக்க அதிகளவிலான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 3,700 மெற்றிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று ஜனவரி 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் இலங்கை வந்தடைந்த பின்னர் கப்பலில் உள்ள எரிவாயுவில் எத்தில் மெர்காப்டனின் அளவு மற்றும் கலவையை ஆய்வு செய்த பின்னரே அதனை தரையிறக்க அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சோதனையின் பின்னரே தறையிறக்கப்படும் என்பதனால் எரிவாயு தட்டுப்பாடு நீங்க 3 வாரங்களாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.