மாணவனின் வாழ்க்கையை மாற்றிய உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு!!

1808

பரீட்சை பெறுபேறு மீளாய்வு..

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வின் பின்னர் அண்மையில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன இதன் போது கணித பாடத்தில் C சித்தி பெற்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவரின் பெறுபேறு A சித்தியாக மாற்றம் பெற்றுள்ளது.

கண்டி தர்மராஜ கல்லூரியைச் சேர்ந்த ருசிர திசங்க அபேவர்தன என்ற மாணவனின் பெறுபேறே இவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது. கணித பிரிவில் குறித்த மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். குறித்த மாணவன் இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடங்களில் A சித்திகளை பெற்றிருந்தார். எனினும் கணித பாடத்தில் இவருக்கு C சித்தியே கிடைக்கப்பெற்றிருந்தது.

இதன்படி குறித்த மாணவனின் இசட் புள்ளி 2.0084 ஆகவும், மாவட்ட நிலை 68 ஆகவும், தேசிய ரீதியில் 966ம் இடமாகவும் காணப்பட்டது. பரீட்சை பெறுபேறு மீளாய்வு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கணித பாட பெறுபேறு C யிலிருந்து A ஆக மாற்றம் பெற்றது.

இதன்படி, மாணவரின் இசட் புள்ளி 2.5538 ஆகவும், மாவட்ட நிலை 12 ஆகவும், அகில இலங்கை நிலை 124 ஆகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த பரீட்சை பெறுபேறு சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக சுமார் 48000 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்தனர் எனவும் இதில் 329 மாணவ மாணவியரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேகன தெரிவித்துள்ளார்.