நடுரோட்டில் கேக் வெட்டி திருமணநாள் கொண்டாடிய தம்பதி : தட்டிக்கேட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

1188

புதுச்சேரி..

புதுச்சேரியில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட வாலிபரை குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தம்பதியினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லயனூர் மூர்த்தி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ். இவரது வீட்டின் எதிரே சங்கர்- ரமணி தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர்.

இதில் வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்த ரமனியின் தம்பி ராஜா, அவரது நண்பர்கள் அசாருதீன், தமிழ் ஆகியோர் மது அருந்தி விட்டு ரோட்டில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாகவும், இதனை சதீஷ் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜா தனது அக்காவின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷை கழுத்து மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக குத்தி விட்டு சென்றுள்ளனர்.

கத்திக் குத்து காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த சதீஷை அவரது உறவினர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சதீஷின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய தம்பதியினர், ராஜா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

இதில் கொலை செய்யப்பட்ட சதீஷ்க்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.