தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

850


விருதுநகர்..



விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நென்மேனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (37).



இவரது மகன் கேசவன்(10), மற்றும் இவருடைய உறவினரான சிவகாசியை சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகன் பூர்ணகோகுல்(10) ஆகிய மூவரும் நென்மேனியில் உள்ள வைப்பாற்று பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.




அப்போது ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது பூர்ணகோகுல் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவரை காப்பாற்ற கேசவன் மற்றும் விஜயலட்சுமி இருவரும் சென்றுள்ளனர்.


இதில் மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பார்த்து கிராம மக்கள் உதவியுடன் மூன்று பேரின் உடல்களையும் சடலமாக மீட்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த இருக்கன்குடி காவல்துறையினர் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நென்மேனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.