வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்த சிலை அகற்றம்!!

3680

ஞாபகார்த்த சிலை அகற்றம்..

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டது.

தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வளாகத்தில் மரக்காரம்பளை வீதியினை பார்த்த வண்ணம் வீதியின் அருகே காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காளியம்மன் சிலைக்கு எதிர்த்திசையில் (வீதியின் மறுபக்கத்தில்) பல வருடங்களாக பேரூந்து தரிப்பிடம் அமைந்திருந்தது.

குறித்த பேரூந்து தரிப்பிடம் அதன் உரிமையாளரினால் மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அவரின் அமரத்துவமடைந்த பெற்றோரின் திருவுருவ படத்தினை அகற்றி அவர்களின் ஞாபகாரத்த சிலையினை வைத்திருந்தனர்.

காளியம்மன் சிலைக்கு முன்பாக எதிர்த்திசையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில்ஸ அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமை இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் செயற்பாடு எனவும்,

அத்துடன் குறித்த இந்து தெய்வம் கிழே இருப்பதுடன் அமரத்துவம் அடைந்தவரின் சிலை மேலே இருப்பது வேதனையளிக்கும் விடயம் எனவே இச் சிலையினை அகற்றுமாறு அப்பகுதி இளைஞர்கள் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்கள் வழங்கியதுடன் தங்களது எதிர்ப்பினையும் வெளிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா தெற்கு பிரதேச சபையின் உத்தரவிற்கமைய பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை அகற்றப்பட்டுள்ளது.