குக்கிராமத்தில் பிறந்து கூலி வேலை செய்து கொண்டே படித்து விடாமுயற்சியால் சாதித்த இளம்பெண்!!

1441

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமம் கிழக்கு செட்டியாப்பட்டி. இங்கே டீக்கடை நடத்திவரும் வீரமுத்து – வீரம்மாள் தம்பதியரின் மகள் பவானியா. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கும் சென்றுகொண்டெ தனது படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

குடும்பத்தில் மூன்றாவது மகளான பவானியாவின் மூத்த சகோதரிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், தனது கல்விக் கனவினை அவர் கைவிட தயாராக இல்லை. பவானியாவின் கிராமத்துக்கு காலை மற்றும் மாலையில் மட்டுமே பேருந்து வசதி இருக்கிறது. மற்ற நேரங்களில் பேருந்தை பிடிக்க சுமார் 5 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும்.

இப்படியான குக்கிராமத்தில் பிறந்த பவானியா, அருகில் உள்ள ஏ.மாத்தூரில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்திருக்கிறார் பவானியா. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே படித்து க்ரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்று வந்துள்ளார் பவானியா. பிறகு கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காததால் ஆன்லைன் வகுப்பில் படித்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.

இதன்மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார் பவானியா. இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அதற்காக தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறுகிறார் பவானியா. இவருக்கு உள்ளூர் மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.