இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த 3 வயது சிறுமி… பின்னர் நடந்த சோகம்!!

716

மெக்ஸிகோவில்..

இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபொது அவர் மீண்டும் உயிரிழந்தார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மூன்று வயது சிறுமி, இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில் சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார். ஆகஸ்ட் 17 அன்று மெக்சிகோவில் இந்த சம்பவம் நடந்தது.

Camila Roxana Martinez Mendoza எனும் அந்த சிறுமியின் தாயார், உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார்.

மெக்ஸிகோவின், வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்று வலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவர் சிறுமியின் தாயார் மேரி ஜேன் மென்டோசாவிடம் குழந்தையை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அதே நேரத்தில், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும் போது மருத்துவர் அவருக்கு பாராசிட்டமால் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

கமிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு, அந்த மருத்துவர் ஒரு வித்தியாசமான மருந்தை பரிந்துரைத்ததாகவும் குழந்தைக்கு பழங்கள் மற்றும் தண்ணீரைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, அதன் பிறகு குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை செலுத்த நீண்ட நேரம் எடுத்ததாக குழந்தையின் தாயார் குற்றம் சாட்டினார்.

பின்னர் குழந்தைக்கு நரம்பு வழியாக மருந்துகளை செலுத்திய மருத்துவர்கள் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதை அகற்றிவிட்டு, இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு நீர்ச்சத்து குறைபாடுதான் அதிகாரப்பூர்வ காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த நாள், இறுதிச் சடங்கு நடைபெற்றபோது, ​​தனது மகளின் சவப்பெட்டியில் கண்ணாடிப் பலகை மர்மமான முறையில் மேகமூட்டமாக இருப்பதை தாய் மென்டோசா கவனித்தார். துக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது வார்த்தைகளை நிராகரித்தனர், அவரால் தனது குழந்தையின் இழப்பைத் தாங்க முடியவில்லை என்றும் அது வருக்கு ஏற்பட்ட மாயத்தோற்றம் என்றும் கூறினர்.

ஆனால் சிறுமியின் பாட்டி, கமிலாவின் கண்கள் அசைவதைக் கண்டு அதிர்ச்சியூட்டும் வகையில் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தார். சிறுமி மீண்டும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவளை உயிர்ப்பிக்க முயன்று தோல்வியடைந்து மீண்டும் இறந்துவிட்டதாக அறிவித்தனர் – இந்த முறை பெருமூளை வீக்கத்தால் (மூளை வீக்கம்) இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்துவிட்டதாக முதலில் அறிவித்த மருத்துவர்கள் மீது Mendoza இப்போது வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை, ஆனால் “இது மீண்டும் நடக்காமல் இருக்க” அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் சான் லூயிஸ் போடோசி மாநில அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்.